சனி, 24 ஏப்ரல், 2010

இதுவே மெய்யான சத்தியம் 8. நித்தியத்தைப் பற்றிய மெய்யான சத்தியம்

தேவனுடைய பிள்ளையாகிவிட்ட ஒருவனுக்கு இக்காலத்திற்குரியவைகளைக் காட்டிலும் நித்தியத்திற்குரியவைகள் அதிக மேன்மையுள்ளதாய் இருக்கும்!

2000 வருடங்களுக்கு முன்பு, ஆண்டவராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பரத்திற்கு ஏறிச் சென்றபோது, தான் மீண்டும் இப்பூமிக்குத் திரும்ப வருவதாக வாக்குரைத்தார். இதைதான் "கிறிஸ்துவின் இரண்டாம் வருகை" என வேதம் அழைக்கிறது. இந்நிகழ்ச்சியே இவ்வுலக சரித்திரத்தில் இனி நடைபெறப் போகும் மாபெரும் நிகழ்ச்சியாகும்! கிறிஸ்து இப்பூமிக்குத் திரும்ப வரும்போது, நம் முழு ஜீவியத்திற்குரிய கணக்கை தேவனுக்கு ஒப்புவிக்க வேண்டுமென்பதை ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் உணர்ந்திருக்கவேண்டும்!!

"இவ்வுலகமும் அதிலுண்டான யாவும் கடந்து போகும் என வேதாகமத்தில் மிகவும் தெளிவாக தேவன் நமக்கு கூறியிருக்கிறார். எனவே இப்பூமிக்குரிய தற்காலிகமானவைகளுக்காக நாம் ஜீவிக்காமல், பரலோக ஞானமுள்ளவர்கள் நித்திய மதிப்புடையவைகளுக்காகவே ஜீவிப்பார்கள்! நித்திய மதிப்புடையவைகள் நம்முடைய குணாதிசயங்களாகிய பரிசுத்தம், அன்பு, நற்குணம், மன்னிக்கும் தன்மை, தாழ்மை போன்றவைகளாகும்! நாம் இந்தப் பூமியை விட்டு கடந்து போகையில் இதுபோன்ற மேலான குணாதிசயங்களை மாத்திரமே நம்மோடு எடுத்துச்செல்ல முடியும்.

"ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஶருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது"

எதிர்காலத்தில், சீக்கிரத்தில் ஒருநாள், இப்பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைகுரிய கணக்கை தேவனுக்கு ஒப்புவிக்கும்படி, மரித்தோரிலிருந்து எழுப்பப்படுவார்கள். என்பதே உயிர்த்தெழுதல் ஆகும்! இருப்பினும், இரண்டு வகையான உயிர்த்தெழுதல் இருக்கும் என வேதாகமம் கூறுகிறது.

முதல் உயிர்த்தெழுதல், தாங்கள் இப்பூமியில் இருக்கும்போது கிறிஸ்துவினிடத்தில் திரும்பி, தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாய் மாறிய நீதிமான்களுக்காக நடைபெறும் உயிர்த்தெழுதல் ஆகும்!

இரண்டாம் உயித்தெழுதல், கிறிஸ்துவை தங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாமலே மரித்தவர்களுக்காக நடைபெறும் உயிர்த்தெழுதல் ஆகும்!!

ஒரு மனிதன் தன் பாவங்களிலிருந்து மனந்திரும்பாமலும் தன்னுடைய பாவமன்னிப்பிற்காக கிறிஸ்துவை விசுவாசிக்காமலும் மரித்தால், ஒரு நாளில் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக அவன் நியாயம் தீர்க்கப்படுவான்! பின்பு அவன் நித்திய நித்திய காலமாய் ஓர் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான். அந்த இடம் அவனுக்கு ஓர் முடிவே இல்லாத தண்டனையாய் இருக்கும். இதுவே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுபோருக்கு நித்திய காலமாய் நிகழப்போகும் பயங்கர எதிர்காலமாகும்!

இதற்கு மாறாக, தங்களைத் தாழ்த்தி, தங்கள் பாவங்களை ஒத்துக்கொண்டு, அவைகளை அறிக்கை செய்து விட்டுவிட்டு, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலமாய் தேவன் வழங்கும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டவர்கள், பரலோகத்தின் மகிழ்ச்சிக்குள் பிரவேசிப்பார்கள்! அங்கே அவர்கள் தேவனோடும், இயேசுகிறிஸ்துவோடும் நித்திய காலமாய் வாசம் செய்வார்கள்!!

நாம் இந்த உலகத்தை விட்டு எப்போது மரிப்போம் என நம்மில் ஒருவரும் கூறிவிட முடியாது. நாம் வாழும் இந்த நாட்களில் ஒருநாள் இப்பூமியில் நம்முடைய கடைசிநாளாய் இருக்கப்போகிறது! அந்த நாள் வருவதற்கு முன்பாக..... உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்ற நிச்சயத்தையும், தேவனை சந்திப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறீர்கள் என்ற உறுதியையும் நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்!!

இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

கருத்துகள் இல்லை: