வெள்ளி, 10 டிசம்பர், 2010

"கந்தை ஆடையில்" தெரிந்து கொண்ட கர்த்தர்! (FOUND BY GOD IN RAG CLOTHES)

           "தேவனின் கருப்பு வைரம்" என அழைக்கப்பட்ட இளம் ஆப்பிரிக்க மிஷனரி சாமுவேல் மோரிஸ், ஒருசமயம் தேவனால் உந்தப்பட்டு நியுயார்க் பட்டணம் சென்றார். அங்கு "ஸ்டீபன் மெரிட்" என்ற ஐசுவரியமான சுவிஷேச பிரசங்கியிடம் "நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறவேண்டும்" என கூறுவதற்காகவே தேவன் சாமுவேல் மோரிஸை அனுப்பியிருந்தார்! அங்கு, அவசரமாய் ஒரு தனவந்தரின் அடக்க நிகழ்ச்சிக்கு அவர் புறப்பட்டு விட்டார். தன்னைக் காண வந்த மோரிஸை தன் குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டார். வழியில் இரண்டு குருமார்களையும் ஏற்றிக்கொண்டார்! அந்த வெள்ளைக்கார குருமார்கள், கந்தை ஆடையில் இருந்த மோரிஸை "இந்த கரிய உருவம்" எங்கே இறங்கும்? என்ற பாவனையில் இகழ்ச்சியுடன் பார்த்தார்கள். இந்த இகழ்ச்சியைப் பொருட்படுத்தாத மோரிஸ் "குதிரை வண்டியில் நீங்கள் எப்போதாவது ஜெபித்ததுண்டா?" என ஸ்டீபன் மெரிட்டிடம் கேட்டார்! அதற்கு மெரிட் "இல்லை" எனக்கூற, "இப்போது ஜெபிப்போம்!" என முழங்கால் படியிட்டு ஜெபிக்க, அங்கேயே ஸ்டீபன் மெரிட் அபிஷேகம் பெற்றார். ஓர் தெய்வ பயம் கொண்ட அதிர்ச்சி, அந்த குருமார்களை ஆட்கொண்டது! அடக்க நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது, ஓர் துணிக்கடையில் வண்டியை நிறுத்தி, விலை உயர்ந்த ஆடையை  வாங்கித் தந்து உடுத்தும்படி மோரிஸிடம் குருமார்கள் வற்புறுத்தினர். அதை அவர் அணிந்தார்! கண்ணாடியில் அந்த ஆடை, மிடுக்காய் இருந்தது! ஆனால், களைந்து போட்ட "தன் கந்தை ஆடையை" பார்த்த சாமுவேல் மோரிஸுக்கு, அதுவே "மிக அருமையானதாக" காட்சி அளித்தது "என்னை தேவன், இந்த கந்தை ஆடையில் கண்டுதான், தெரிந்தெடுத்தார்!" என கூறி அதை பத்திரப்படுத்தி, தன் அலுவலகத்தின் கண்ணாடிப் பெட்டியில் "காட்சிப் பொருளாக வைத்து" தன் தேவனைத் துதித்து மகிழ்கொண்டாடினார்!!                                                                                                                                  -Selected

வியாழன், 9 டிசம்பர், 2010

இதுவே உமக்கு பிரியம்! (HIS GOOD PLEASURE)

            சுத்த இருதயமா (சங். 51: 10) ? நொறுங்குண்ட இருதயமா (சங். 51: 17) ? இவைகளில் தேவா, உமக்கு எது பிரியம்? என கேள்வி தொடுக்கப்பட்டால், அதற்கு தேவன் தரும் பதில் "நொருங்குண்ட இருதயமே எனக்குப் பிரியம்" என்பதாகவே இருக்கும்1 (சங். 51:18) ஏனெனில், சுத்த இருதயம் பெற்று வாழ்பவர்கள், நொருங்குண்ட இருதய வாழ்விற்குள் வராமலே இருந்திட முடியும். சுத்த இருதயம் கொண்டவர்கள் தேவனை தரிசிப்பார்கள் அல்லது காண்பார்கள் என்பது நிஜம்தான்! (மத். 5:8) ஆகிலும் நொருங்குண்ட இருதயம் பெற்றவர்களோ தேவனுக்கு சமீபமான ஐக்கியம் பெறுவார்கள்!(சங்.34:1)                                                                                                                                                                                                                                                                                                                                                நம்மோடு ஐக்கியம் கொள்ளும்பொருட்டே தேவன் நம்மை சிருஷ்டித்தார்! அதுவே அவருக்கு பிரியம்!! ஆனால், சுத்த இருதயத்தைக் கடந்து "நொருங்குண்ட வாழ்க்கைக்கு" எத்தனைபேர் "மனப்பூர்வமாய்" பிரியம் கொள்வார்கள்? என்பது இன்றும் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது! ஏனெனில் அதற்கு ஒரு பலிபீடம் வேண்டும்! எதற்கு? அதில் தானே பலியாவதற்குத்தான்!! இந்த ஊக்கமான நெஞ்சுறுதி அல்லது ஓங்கிய விசுவாசமே இன்று அரிதாய் காணப்படுகிறது!                                                                                                                                                                                                                                                                                                     "இதோ உம் சித்தம் செய்ய வருகிறேன்" என இந்த பூமிக்கு மனுபுத்திரனாய் இயேசு ஒரு சரீரத்தோடு வந்த அடுத்த கணமே, தன் பிதாவுக்கு பிரியமானதைச் செய்திட நாடினார்! "இயேசுவைக்குறித்து" புத்தகச் சுருளில் தேவன் எழுதி வைத்த நோக்கமும் இதுதான்! (எபி. 10:7) இந்த நோக்கத்தின் பின்னணி யாதெனில், தன் குமாரனோடு ஐக்கியம் கொள்ளவேண்டும் என்ற அவரது பிரியம்! நாசரேத் தொடங்கி, கல்வாரி வரை, அவர் வாழ்வின் 33 1/2 வருட ஜீவியமும் ஒரு பலிபீடத்தின் ஜீவியம்தான்! அவருடைய "சரீரம் பிட்கப்பட்டதற்கு" அல்லது அவரது சரீரம் "நொறுக்கப்பட்டதற்கு" காரணம், பிதாவுக்கு பிரியமான "அவரோடு ஒன்றான ஐக்கியம் பெறுவதற்கே ஆகும்!                                                                                                                                                                                                                அசட்டை பண்ணப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும், துக்கம் "நிறைந்திருப்பதும்" பாடு அனுபவிப்பதும், ஒடுக்கப்படுவதும், கள்ளர் மத்தியில் ஒருவராக்கப்படுவதும்....... கர்த்தருக்குப் பிரியம்! (ஏசாயா 53:7-10) ஏனெனில், இங்குதான் கர்த்தருக்குப் பிரியமான தாசன், அவரை அறிந்து நெருங்கி வாழும் ஐக்கியம் பெறுகிறான்! (ஏசாயா 53:11). இதே ஐக்கியத்தைத்தான் தன் சீஷர்களும் பெற்றிட இயேசு வாஞ்சித்தார்! ஏனெனில், இந்த ஐக்கியத்தை பெற்ற யாவருமே ஒருவரோடொருவர் தெய்வீக ஐக்கியம் கொள்வது தானாகவே மலர்ந்து விடும்! "நான் உம்மோடும், அவர்கள் நம்மோடும்" என இயேசு குறிப்பிட்ட "தேறின ஐக்கியத்தை" கண்டடைவார்கள்! (யோ. 21:23).                                                                                                                                                                                                                                   தன் சுத்த இருதயம் தொடங்கி... இந்த நொருங்குண்ட இருதயம் வரை பெற்றிடும் கல்வாரிப் பயணத்திற்கு யார் ஆயத்தம்? மெய்யான "கர்த்தருடைய மேஜை" அங்குதான் உள்ளது. "ஆதமின் (அல்லது நமது) ஜீவன்" சிதைந்து "கிறிஸ்துவின் ஜீவன்", அவரது மகிமை அல்லது திவ்ய சுபாவப் பரிமாற்றம் இங்கேதான் சம்பவிக்கிறது! "நானே ஜீவன்" என்றவரோடு ஐக்கியமும் இங்குதான் பரிமளிக்கிறது! ஆம், அனுதினமும் அவரது மேஜையில் அமர்ந்து புசித்து, ஐக்கியம் கொள்ளும் பாக்கியவான்கள் இவர்களே! ஓ கர்த்தாவே, இதுவே உமக்குப் பிரியம்.... இதுவே எமக்கும் பிரியம்!!                                                                                                                                                                                                                                                                            T. ரத்தினகுமார்