சனி, 24 ஏப்ரல், 2010

இதுவே மெய்யான சத்தியம் 7. இரட்சிப்பைப் பற்றிய மெய்யான சத்தியம்

"இயேசு" என்ற நாமத்திற்கு "இரட்சகர்" என அர்த்தமாம். அவர் ஜனங்களின் பாவங்களிலிருந்து அவர்களை மீட்டு இரட்சிக்கும்படியாக இந்த பூமிக்கு வந்தபடியால்தான், இந்த நாமத்தை உடையவராய் இருந்தார்.

இரட்சிப்பு மன்னிப்பைக் காட்டிலும் மேலானதாகும்!

இந்த வித்தியாசத்தை தெளிவாக அறிந்து கொள்வதற்கு ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். என்னுடைய வீட்டிற்கு வெளியே உள்ள சாலை பழுது பார்க்கப்பட்டு ஒரு ஆழமான குழியை அங்கே வெட்டி இருக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். நான் என்னுடைய சிறு பையனைப் பார்த்து,"சாலையில் உள்ள குழியின் அருகே நீ போகக்கூடாது. ஏனென்றால் நீ அதில் தவறி விழுந்து விடக்கூடும்" என எச்சரித்துக் கூறுகிறேன். ஆனால் அவனோ என்னுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் குழியின் அருகே சென்று அதை எட்டிப் பார்க்கிறான்! இப்போது அவன் கால் சறுக்கி குழிக்குள் விழுந்துவிட்டான்!! பத்து அடி ஆழமுள்ள அக்குழியிலிருந்து உதவிக்காக என்னை நோக்கி கூக்குரலிட்டுக் கூப்பிடுகிறான். உதவி செய்வதற்காக நான் குழியின் அருகே வந்தவுடன் அவன் என்னைப் பார்த்து, "அப்பா, உங்கள் கட்டளைக்கு கீழ்ப்படியாததற்காக உண்மையாகவே நான் வருத்தப்படுகிறேன், தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்!" எனக் கூறுகிறான். நான் அவனைப் பார்த்து, "பரவாயில்லை மகனே, நான் உன்னை மன்னித்துவிட்டேன், குட்பை!" எனக் கூறிவிட்டு திரும்பச் சென்றுவிட்டால் நான் அவனுக்கு என்ன செய்திருக்கிறேன்? ஆம், நான் அவனை மன்னித்துவிட்டேன், அவ்வளவுதான். ஆனால் நானோ அவனைக் காப்பாற்றவில்லை! இரட்சிப்பில், மன்னிப்பைக் காட்டிலும் மேலானவை அடங்கியிருக்கிறது. நான் என் மகனை அவன் விழுந்த குழியிலிருந்து தூக்கி எடுப்பதும் இந்த இரட்சிப்பிற்குள் அடங்கியிருக்கிறது!!

நமக்கும் இவ்வாறு செய்வதற்காகவே இயேசு வந்தார். அவர் நம்முடைய பாவங்களை மன்னித்தால் மட்டும் போதாது! நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை அவர் இரட்சிக்கவும் வேண்டும்!!

இரட்சிப்பை நாம் "கடந்த காலம்; நிகழ்காலம்; எதிர்காலம்" என முக்கால அனுபவமாய் அனுபவித்திட வேண்டும். முதலாவதாக, நாம் பாவத்தின் தண்டனையிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும். அதற்கடுத்து பாவத்தின் வலிமையிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும். அதன் பின்பு முடிவாக, நாம் பரலோகம் செல்லும் போது பாவ சமூகத்தைவிட்டே இரட்சிக்கப்பட்டுவிடுவோம்!

இரட்சிப்பின் முதல் பகுதி பாவங்களிலிருந்து மன்னிக்கப்படும் கிரியைச் செய்கிறது. இதன் மூலம் நம் கடந்தகால குற்றங்கள் நம்மை விட்டு நீங்கிவிடுகின்றன.

ஆனால் இது மாத்திரம் போதாது. இனிவரும் காலத்திலிருந்து ஓர் உத்தமமான வாழ்க்கை வாழ்வதற்கு தேவனிடத்திலிருந்து இன்னமும் உதவி தேவையாயிருக்கிறது. இதற்காகவே தேவன் தம்முடைய "வல்லமையை" நமக்குத் தருகிறார்!!

தேவ பெலனுக்காக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் முதல் மூலதனமாயிருப்பது, "தேவனுடைய வார்த்தையே" ஆகும். நாம் சோதனைகளை ஜெயிப்பதற்கு வேதப்புத்தகம் ஓர் வலிமையான ஆயுதமாய் நமக்கு உதவுகிறது. இதனிமித்தமே நாம் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வசனத்தை வாசிக்கும் பழக்கத்தை உடையவர்களாய் இருக்க வேண்டும். அதனிமித்தம் தேவன் நம்மோடு தம் வார்த்தையின் மூலமாய் பேசி, அன்றாட நம் ஜீவியத்தின் போராட்டங்களைச் சந்திப்பதற்கு நம்மைப் பெலப்படுத்துகிறார்.

தேவ பெலனுக்கென நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது மூலதனமாயிருப்பது, நமக்குள் வந்து வாசமாயிருக்கும் "பரிசுத்தாவியாகிய தேவனே" ஆவார். நம்முடன் தினமும் பேசவும், வாழ்க்கைப் போராட்டங்களுக்குரிய பெலனைத் தரவும், கிறிஸ்துவின் அடிச்சுவடிகளைப் பின்பற்றும் சீஷர்களாய் வாழ்வதற்கு உதவி செய்யவும், பரிசுத்தாவியானவர் நமக்குள் நிரந்தரமாய் வாழ விரும்புகிறார். எனவேதான், பரிசுத்தாவி நம்மைத் தொடர்ச்சியாய் நிரப்பும்படி நாம் தேவனிடம் கேட்க வேண்டும்!!

ஆண்டவராகிய இயேசு இதைகுறித்து கூறுகையில் "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுபவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா" என்றார்.

தேவ பெலனுக்காக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் மூன்றாவது மூலதனமாய் இருப்பது, "ஏக சிந்தை கொண்ட கிறிஸ்தவர்களோடு கொண்டிடும் ஐக்கியமாகும்."

இருப்பினும் இந்த இடத்தில் நாம் சற்று கவனமாயிருக்க வேண்டியதிருக்கிறது. ஏனென்றால் தங்களைக் "கிறிஸ்தவர்கள்" என அழைத்துக்கொள்ளும் எல்லோரும் உண்மைக்கிறிஸ்துவர்களாய் இருப்பதில்லை. இவ்வாறு பெயரளவில் மாத்திரம் கிறிஸ்துவர்களாய் இருப்பவர்களை நாம் தவிர்த்துவிடல் வேண்டும்! நாமோ, அனுபவபூர்வமான கிறிஸ்துவர்களாய் மாறி, இயேசுகிறிஸ்துவைத் தங்கள் அனுதின வாழ்வில் பின்பற்ற வாஞ்சிப்பவர்களோடு மாத்திரமே ஐக்கியம் கொள்ள நாடவேண்டும்!

கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளும்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறுகிறபடியால், " பரத்திலிருந்து பிறந்தவர்கள்" என வேதாகமம் நம்மை கூறுகிறது. இப்போது தேவன் நம்முடைய தகப்பனாய் இருக்கிறார்! எந்த உலகத் தகப்பனைப் போலவே , இப்பூமியில் நமது ஆவிக்குரியதும் சரீரத்திற்குரியதுமான எல்லாத் தேவைகளையும் நமக்குத் தருவதற்கு தேவனும் ஆர்வம் கொண்டவராய் இருக்கிறார்.

சர்வ வல்லமையுள்ள தேவனிடம் நாம் பேசுவதும், நம்முடைய ஆவியில் தேவன் பேசுவதுமாகிய "ஜெபிக்கும் சிலாக்கியம்" ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் கையளிக்கப்பட்ட ஆச்சரியமான சிலாக்கியங்களில் ஒன்றாகும்.

இன்று அநேக ஜனங்கள் தனிமையில் மெளனமாய் துன்பப்படுகிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தங்கள் வருத்தங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு யாருமே இல்லை! ஆனால் தேவனுடைய பிள்ளைக்கோ, பரலோகத்தில் ஒரு தகப்பன் இருக்கிறபடியால், அவரிடத்தில் தனக்குரிய யாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடியும். பரலோகத் தகப்பன், இப்பூமியில் நமக்குத் தேவையான யாவற்றையும் தருவார் என நாம் நம்பியிருக்க முடியும்!

இவ்வுலகில் அநேக ஜனங்கள், பிறர் செய்த பில்லி சூனியத்தினாலோ அல்லது செய்வினையினாலோ துன்பம் அனுபவிக்கிறார்கள். நீங்கள் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்திருப்பீர்கள் என்றால், இதுப்போன்ற சாத்தானுக்குரிய கிரியைகள் உங்களைத் துன்புறுத்த இனிமேலும் முடியாது! உங்களை இரட்சிக்கும்படி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை நீங்கள் கூப்பிடும்போது, உங்கள் மீதுள்ள எவ்வித பில்லி சூனியத்தின் வல்லமையும் "நொடிப்பொழுதில்" "இப்போதே" விரட்டி எறியப்படமுடியும்!

’தேவனுக்குக் கீழ்படிந்திருங்கள்; பிசாசிற்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்’ என்றே வேதம் கூறுகிறது!

தன்னுடைய பிள்ளைகளின் இப்பூமிக்குரிய வாழ்க்கையில் பாடுகளும் பிரச்சனைகளும் இருக்காது என தேவன் வாக்குத் தரவேயில்லை! எந்த மானிடனையும் போலவே பாடுகளையும் பிரச்சனைகளையும் சந்திக்க தேவன் நம்மை அனுமதிக்கிறார்! ஆனால் நாமோ இவ்வித பாடுகளின் மூலமாய் தேவனை மென்மேலும் நெருங்கி அறிந்து கொள்கிறோம். பாடுகளின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், தேவனுடைய அற்புதமான உதவியை நாம் ருசிக்கிறபடியால், அவரை அறிந்துகொள்ளுகிற அறிவு நம்மில் வளருகிறது!

அடுத்த அத்தியாயம்


இந்த கட்டுரை சகரியா பூணன் எழுதிய "THE REAL TRUTH" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

www.cfcindia.com/tamil/

கருத்துகள் இல்லை: