செவ்வாய், 4 மே, 2010

தேவ ஆசீர்வாதமா? தேவ அங்கீகாரமா?

இன்றைய உலகில் இரண்டு ரகமான கிறிஸ்தவ விசுவாசிகள் இருக்கிறார்கள்

1) உலகப் பொருட்களின் அடிப்படையில் தேவ ஆசீர்வாதத்தை தேடுபவர்கள்.

2) தெய்வ பக்தியின் அடிப்படையில் தேவ அங்கீகாரத்தை வாஞ்சித்துத் தேடுபவர்கள்.

இவ்விரு சாராருக்கும் இடையில்தான் எத்தனை பெருத்த வித்தியாசம்!
ஏராளமான இன்றைய விசுவாசிகள், தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதில், அதிலும் பிரதானமாய் உலகப் பொருட்களினால் ஆசீர்வதிக்கப்படுவதில் மாத்திரமே திருப்தி கொண்டுவிட்டார்கள். எனவேதான் இன்றைய கிறிஸ்தவ புத்தகக் கடைகளில், "ஒருவர் எப்படி தன் சரீர வியாதியிலிருந்து சுகமடைய முடியும் என்பது பற்றியும், தசமபாகம் செலுத்தி எவ்வாறு ஐசுவரியவானாகமுடியும்" என்பது பற்றியுமான புத்தகங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. இவை வலியுறுத்துவது எல்லாம், சரீர-பொருளாதார சுக வாழ்வு! சொகுசு வாழ்க்கை! செல்வசெழிப்பு! இவை என்ன? இவை அனைத்தும் சுயத்தை மையமாகக்கொண்டு வாழும் ஓர் வாழ்க்கை! ஆனால் தேவனுடைய வார்த்தையோ, நாம் நமக்காக ஜீவிக்காமல் அவருக்காக ஜீவிக்க வேண்டும் என்பதற்காகவே இயேசு மரித்தார் என்றல்லவா கூறுகிறது (2கொரிந்தியர் 5:15). அதாவது நம்மை நாமே பிரியப்படுத்தி ஜீவிப்பது அல்ல, தேவனை மாத்திரமே பிரியப்படுத்தி ஜீவிக்கும் ஓர் ஜீவியம்!
கிறிஸ்தவ ஊழியங்களில் உள்ள ஆசீர்வாதத்தை சற்று எண்ணிப்பாருங்கள். ஆம்! தான் பூரணமாய் அங்கீகரிக்க முடியாத எண்ணற்ற ஊழியங்களை தேவன் ஆசீர்வதிக்கத்தான் செய்கிறார். ஆனால் இவ்விதம் இயேசுவின் நாமத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனேக ஊழியங்களை அவர் திட்டவட்டமாக அங்கீகரிக்கவே இல்லை!
தேவன் மூலமாய் உலகப் பொருட்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நிறைவேற்ற வேண்டிய ஒரே நிபந்தனை என்னவென்றால், ஒருவர் நல்லவராகவோ அல்லது தீயவராகவோ இருக்க வேண்டும், அவ்வளவுதான்!! ஏனென்றால், தேவன் நீதியுள்ளோர் மீதும் அநீதியுள்ளோர் மீதும் ஒரே சமமாகவே தன் சூரியனை உதிக்கப் பண்ணுகின்றார் (மத்தேயு 5:45) என இயேசு கூறினார். எனவே பொருளாதார ஆசீர்வாதங்கள், தேவன் ஒரு மனிதனின் வாழ்க்கையை அங்கீகரித்தற்கு அடையாளமே கிடையாது! வனாந்திரத்தில், இரண்டு கோடி இஸ்ரவேலர்கள் 40-வருடங்களாக தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருந்தனர். அவர்கள் மீது தேவன் கடுமையாய் கோபம் கொண்டிருந்தார் (எபிரேயர் 3:17). இருப்பினும், இந்த எல்லா வருட காலமும் தேவன் அவர்களுக்கு உணவையும், நல்ல சுகத்தையும் கொடுத்தார். ஆம், அதையும் "அற்புதமாகக்" கொடுத்தார் (உபாகமம் 8:2). எனவே சரீர பொருளாதாரத் தேவைகளுக்கான ஜெபத்திற்கு கிடைக்கும் "அற்புதமான பதில்கள்", தேவன் ஒரு மனிதனின் வாழ்க்கையைக் குறித்து மகிழ்ந்திருக்கிறார் என்பதற்கு அடையாளம் அல்லவே அல்ல!
இதற்கெல்லாம் மாறாக, இப்பூமியில் இயேசு வாழ்ந்தபோது, 30-வயது நிறைவுபெற்றதும் தேவ அங்கீகாரம் அவருக்கு கிட்டியது! அதற்கு ஒரே காரணம் என்னவெனில், இந்த எல்லா வருடங்களிலும் இயேசு உண்மையுள்ளவராய் இருந்து "அவரைப் பாவம் செய்யும்படி" தூண்டிய சோதனைகளை மேற்கொண்டு ஜெயித்தார்! அவர் தன்னையல்ல, பிதாவை மையமாகக் கொண்டதோர் வாழ்க்கையே வாழ்ந்தார்! ஆம், அவர் தன்னைத் தானே பிரியப்படுத்துகின்ற ஒன்றையும் ஒருபோதும் செய்யவே இல்லை (ரோமர் 15:3). அவருடைய ஞானஸ்நானத்தில், "இவர் என் நேச குமாரன் இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்" என்றே பிதா நற்சாட்சி வழங்கினார். ஆம், "நான் எப்படியெல்லாம் ஆசீர்வதித்த என் நேச குமாரன்" என்று பிதா கூறவேயில்லை! இந்த இரண்டாவது சாட்சியில் எந்த மதிப்பும் இல்லவேயில்லை! இயேசுவுக்குத் தேவையாய் இருந்ததெல்லாம் தேவ அங்கீகாரத்தை முடிசூட்டும் அந்த முதலாவது சாட்சியே ஆகும்! நாமும் இதே சாட்சியைப் பெறுவதற்காகத்தான் இன்று இயேசுவைப் பின்பற்றுகிறோம்!!
பிறவியிலிருந்தே ஆதாமின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் "சுயத்தை" மையமாகக் கொண்ட இழிபிறவிகள்! ஆரம்பப்படியாக, பாவ மன்னிப்பின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே அவரிடம் வருகிறோம். இதையடுத்து, இடைவிடாத பின்னல் தொடர்பாக சரீர சுகம்; செல்வ செழிப்பு; உத்தியோகம்; வீடு; வாழ்க்கை துணை..... என ஏக்கம் கொண்டு அவைகளை அவரிடமிருந்து கேட்டு வாரிக்கொள்ள வாஞ்சிக்கிறோம். நம்முடைய கண்களுக்கும், ஜனங்களின் கண்களுக்கும் ஆழ்ந்த பக்தியுடையவர்களாய் நாம் காணப்பட்டாலும்கூட இன்னமும் நம் வாழ்க்கை சுயத்தை மையமாககொண்டே இருந்திட முடியும். இவ்வாறு எக்காலமும் ‘நான்’ ‘எனக்கு’ ‘என்னுடைய’ என்றும், சரீர பொருளாதார ஆசீர்வாதங்கள் என்றும்.... சுய வாழ்வின் மையத்திலேயே ஜீவித்து செத்துப் போகிறார்கள். இது வேதனையன்றோ!
உண்மையான ஆவிக்குரிய தன்மையானது - கோபம், எரிச்சல், இச்சைநிறைந்த சிந்தைகள், பண ஆசை போன்ற பல பாவங்களிலிருந்து நாம் ஜெயம் பெறுவது மாத்திரம் அல்ல! நாம் நமக்காக ஜீவிப்பதிலிருந்து ஓய்திருக்கிறோமே, அதுதான் தேவ அங்கீகாரத்திற்குறிய மேன்மை! அதாவது, "என் சொந்த ஆதாயம்; என் சொந்த வசதி; என் சொந்த செளகரியம்; என் சுய சித்தம்; என் சுய உரிமைகள்; எனக்கான புகழ்ச்சி; இன்னும் என்ன, என் சுய ஆவிக்குரிய நலம்..." ஆகிய இவைகளிலிருந்து ஓய்ந்திருப்பதேயாகும். "இப்போது" சீஷர்கள் தாங்கள் ஜெபிப்பதற்கு கற்றுத்தரும்படி இயேசுவிடம் கேட்டபோது, ‘நான்’ ‘எனக்கு’ ‘என்னுடைய’ என்ற ஒரு வார்த்தைகூட இல்லாத ஓர் ஜெபத்தையே அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்! (லூக்கா 11:1-4). நாம் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையே தேடவேண்டுமென இயேசு நமக்கு கற்றுக்கொடுத்தார். அதாவது, நம் வாழ்வின் சிங்காசனப் பீடத்திலிருந்து சுயத்தை கவிழ்த்துப் போட்டு, தேவனையும் ஆவிக்குரியவைகளையுமே நம் வாழ்வின் மையமாகிய சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்ய வேண்டும்!
தேவனுக்கும், உலகப்பொருட்களுக்கும் (அதாவது ஐசுவரியம், சுகபோகம், வசதி போன்றவை) ஆகிய ‘இரண்டிற்கும்’ சேவகம் செய்ய ஒரு மனிதனாலும் கூடாது. தேவ ஆசீர்வாதம் நம்மீதும் நம் பிள்ளைகள் மீதும் தங்கியிருப்பதை வைத்து, தேவன் நம்மீது மகிழ்ச்சியாய் இருக்கிறார் என்பதற்கு ஓர் அடையாளமாக நாம் இன்னமும் எண்ணிக் கொண்டிருபோமென்றால், சாத்தான் நம்மை நன்றாய் வஞ்சித்துவிட்டான் என்பதற்கு சந்தேகமேயில்லை. தேவ ஆசீர்வாதம்; தேவ அங்கீகாரம் ஆகிய இவ்விரண்டும் முழுக்க முழுக்க வித்தியாசமான எதிர்முனைகள்! நாம் இப்பூலோக ஜீவியத்தை ஓடி முடிக்கையில் பெறவேண்டிய சாட்சி எதுவென்றால், ஏனோக்கு இப்பூமியை விட்டுச் செல்லுகையில் பெற்ற "அவன் தேவனுக்குப் பிரியமானவன்" (எபிரேயர் 11:5) என்ற சாட்சியேயாகும்! பார்த்தீர்களா, "தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்ற சாட்சியில் எந்த மதிப்பும் இல்லவே இல்லை. ஏன் தெரியுமா? இவ்வுலகில் வாழும் கோடானுகோடி அவிசுவாசிகள் கூட இந்த சாட்சியைப் பெற்றுக் கொள்ள முடியுமே!! இன்று தேவன், தன் ஆசீர்வாதத்தை மட்டு மல்லாமல் தேவ அங்கீகாரத்தையே பிரதானமாய் வாஞ்சிப்பவர்களைக் காண்பதற்கு தவியாய்தவித்து நோக்கிக் கொண்டிருக்கிறார்! 

கேட்பதற்கு காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக் கடவன்!!

சகரியா பூணன் எழுதிய ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம் 
T. ரத்தினகுமார்


http://www.cfcindia.com/tamil/